விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய விஞ்ஞான மன்றத்தினால் உலக ஆராய்ச்சி சபையின் ஒத்துழைப்புடன் ஒழுங்குசெய்யப்பட்ட ஆராய்ச்சி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வொன்று விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் நவம்பர் மாதம் 28ஆம் திகதி (இன்றைய தினம்) கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது.
இந்த செயலமர்வில் இலங்கையின் பல முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களும் இலங்கை பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொண்டனர். ஆராய்ச்சி முகாமைத்துவத்தில் தலைசிறந்த பயன்பாடு தொடர்பாக இந்நாட்டு விஞ்ஞான சமூகத்திற்கு அறிவூட்டுவது செயலமர்வின் நோக்கமாக இருந்தது. இந்த செயலமர்வில் பிராந்திய அறிஞர்களுடன் பகிரங்க கருத்தாடலில் ஈடுபடுவதற்கு உள்ளூர் விஞ்ஞான சமூகத்திற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.
நவம்பர் 29 - 30 ஆகிய இரண்டு நாட்களில் தேசிய விஞ்ஞான மன்றமும் நியுசிலாந்தின் வியாபார, புதிய உற்பத்திகள் மற்றும் தொழில் அமைச்சும் இணைந்து ஏற்பாடுசெய்த ஆசிய பசிபிக் பிராந்திய ஆராய்ச்சி மகாநாடு 2017 கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்தப்படவிருக்கிறது. அத்துடன், அந்த மகாநாட்டுடன் இணைந்ததாக இந்த ஆராய்ச்சி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
BIMSTEC தொழில்நுட்ப ஒப்படை வசதியை ஸ்தாபிப்பது தொடர்பான நான்காவது சிறப்பறிஞர்களின் கூட்டம் நவம்பர் மாதம் 21 - 20 வரை கொழும்பில் நடைபெற்றது. விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த கூட்டம் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இதில் BIMSTEC இல் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 8 பிரதிநிதிகளும் இலங்கைப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் ஜயந்த விஜேரத்ன அவர்கள் நான்காவது சிறப்பறிஞர் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை வகித்ததோடு BIMSTEC செயலகத்தின் பணிப்பாளர் எஸ்.எம். நஸ்முல் ஹசன் அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். சிறப்பறிஞர் குழுவின் பிரதிநிதிகளுக்கிடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் தொழில்நுட்ப ஒப்படை வசதியை ஸ்தாபிப்பதற்காக ஒன்றுகூடல் நிருபத்தைத் (Memorandum of Association) தயாரிக்கும் பணியை நிறைவுசெய்ததன் பின்னர் கூட்டம் முடிவடைந்தது.
(BIMSTEC- வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளில் பல்துறைசார் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆரம்பம்)
நவம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உலக விஞ்ஞான தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு நவம்பர் மாதம் 10 - 17 வரையிலான காலப்பகுதியில் விஞ்ஞான வாரமொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளது. தேசிய விஞ்ஞான வாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்குமுகமாக 'உலக புரிந்துணர்வுக்காக விஞ்ஞானம்' என்ற தொனிப்பொருளின் கீழ் உலக விஞ்ஞான தின கொண்டாட்டத்தின் பிரதான வைபவம் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் கொழும்பு டீ.எஸ். சேனநாயக்க வித்தியாலயத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. விஞ்ஞான தின கொண்டாட்டத்தின் பிரதான வைபவம், பாடசாலை கல்வியில் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் விரிவாகப் பிரபல்யப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 1200 பாடசாலை மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் தனித்துவமான நிகழ்ச்சித்திட்டம் என்ற வகையில் பாடசாலை கல்வி செயற்பாட்டில் STEM கல்வியை மேம்படுத்தி பிரபல்யப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறையுடன் நேரடியாகப் பிணைந்திருக்கின்ற விஞ்ஞான, தொழில்நுட்பவியல், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடநெறிகளைத் தனித்துவமாக ஒதுக்கிக்கொண்டு அந்த பாடங்களைக் கற்பதற்காக அதிகளவு பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவிப்பது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். அந்த நோக்கத்தை வெற்றிகொள்ளுவதற்காக பாடசாலை மாணவர்களிடையே இந்த பாடங்களில் அக்கறையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு இம்முறை உலக விஞ்ஞான தினத்தைக் கொண்டாடுவதற்கு விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்றுடன் ஆரம்பமான விஞ்ஞான வாரத்தில் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் நெறிப்படுத்தலில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட பல நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளக்கூடிய அறிவுள்ள சமூகமொன்றை உருவாக்குவதற்கு விஞ்ஞான தொழில்நுட்ப துறையின் கடமைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டுதல், சமூக அபிவிருத்தியை முன்னிட்டு விஞ்ஞான தொழில்நுட்ப துறையின் பயன்பாடுகளுக்காக தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல், என்பவற்றுடன் வறுமையை ஒழிப்பதற்காக விஞ்ஞான தொழில்நுட்ப துறையின் பங்களிப்பை வழங்குதல் போன்ற விடயங்கள் விஞ்ஞான வாரத்தை பிரகடனப்படுத்துவதன் நோக்கங்களுக்கிடையில் உள்ளன.
விஞ்ஞான வாரத்தில் பிரதேச மட்டத்திலும் பல நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன. அத்துடன், அதற்காக குறித்த பிரதேசங்களுக்கு அருகில் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என்பவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு விஞ்ஞான, தொழில்நுட்ப துறைக்கு உரிய குறுந் திரைப்படங்கள், விஞ்ஞான மகாநாடுகள், விஞ்ஞான கண்காட்சிகள் போன்றவற்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் நவம்பர் 10 - 17 வரையிலான காலப்பகுதியில் தேசிய விஞ்ஞான வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 'உலக புரிந்துணர்வுக்கான விஞ்ஞானம்' என்ற தொனிப்பொருளின் கீழ் உலக விஞ்ஞான தின கொண்டாடத்திற்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விஞ்ஞான வாரத்தில் அமைச்சின் மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் நெறிப்படுத்தலில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறையில் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட பல நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சித்திட்டங்களுக்கிடையே விசேட அம்சமாக தேசிய விஞ்ஞான பாதயாத்திரையொன்று விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனெவிரத்ன ஆகியோரின் பங்கேற்பில் நவம்பர் மாதம் 11ஆம் திகதி முற்பகல் நடைபெற்றது. கொழும்பு 07, கைத்தொழில் தொழில்நுட்ப வளாகத்திலிருந்து விஹாரமகாதேவி பூங்கா வரை பயணித்த இந்த விஞ்ஞான பாதயாத்திரையில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
பாதயாத்திரையில் பல கண்காட்சி வாகனங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொண்டு அபிவிருத்தியடைந்த நாடொன்றை உருவாக்கும் பணியில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புதிய உற்பத்தி துறையின் கடமைகள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது விஞ்ஞான பாதயாத்திரையை ஒழுங்குசெய்வதன் நோக்கமாக இருந்தது.
வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி பற்றிய ஐக்கிய தேசிய மகாநாட்டின் (UNCTAD) செயலாளர் நாயகம் கலாநிதி மிக்ஹிசா கிட்டுயி அவர்கள் இலங்கையில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கொள்கையை (STIP) மீளாய்வுசெய்வதற்கும் தொழில்நுட்ப உதவி மற்றும் தேவைப்படும் நிதியுதவிகளைப் பெறுவதற்கு நவீன முறைகளைக் கண்டறிவதற்கும் இலங்கைக்கு உதவிசெய்வதற்கு UNCTAD தயாராக இருக்கிறது என்பதை விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.




